Thursday, March 26, 2015

வண்ணங்கள் களைப்படையும் போது


வரைந்து முடித்து 
விழித்திருக்கும் சிங்கம் 
என்று பெயர் வைத்தாள் மான்யா

உன் சிங்கம் 
எப்போது உறங்கும் 
கேட்டேன் 

உடனே சொன்னாள் 
வண்ணங்கள் 
களைப்படையும் போது

Sunday, March 22, 2015

சுவர்

நீ ஒரு 
கல் வைத்தாய் 
நான் ஒரு 
கல் வைத்தேன் 
நமக்கிடையே 
ஒரு சுவரை 
உருவாக்கிக் கொண்டோம்

Wednesday, March 18, 2015

இருந்தது

என் ஸ்வெட்டரைப் பார்த்த
பெரியவரின் கண்களில்
நடுக்கம் இருந்தது

நடந்தேன்

இப்போது என்னிடம்
நடுக்கம் இருந்தது

பெரியவரிடம்
ஸ்வெட்டர் இருந்தது

Tuesday, March 10, 2015

கதாபாத்திரங்கள்

மது அருந்திக்கொண்டிருந்தனர் 
கதாபாத்திரங்கள் 
எனக்குக் கொஞ்சம் 
கிடைக்குமா 
கேட்டேன் 
எழுத்தின் போதை 
போதும் உனக்கு 
எனச் சொல்லி 
கதவடைத்துக் கொண்டனர்

Saturday, March 07, 2015

கூடு

கூடு விட்டு
கூடு பாயும்
ஒருவரை சந்தித்தேன்
இப்போது
எந்த கூடு என்றேன்
இதற்கு பதில்
சொல்வதற்குள்
மாறி இருக்கலாம்
கேள்வியைத்
தவிர்த்து விடலாமே என்றார்











Thursday, March 05, 2015

பூங்கொத்து

பூங்கொத்து வாங்கிக்கொண்டு புறப்பட்டேன்
வழியில் குழந்தை வாங்கிக்கொண்டது
வெறும் கையுடன் உன்னைச் சந்தித்து
விஷயத்தைச் சொன்னேன்
குழந்தை போலச் சிரித்தாய்
அப்போது
நான் தந்தப் பூங்கொத்தை
அந்தக் குழந்தை
உன் கையில்
தந்து கொண்டிருந்தது

Wednesday, March 04, 2015

பிரியமும் விஷமும்

வேறு வழியின்றி
உன்னைக் கொல்ல
வந்திருக்கிறேன்
தேநீர் தருகிறாய்
உன் கண்களைப் பார்த்தபடி
அருந்துகிறேன்
உன்னைப் காப்பாற்ற
நீ தந்த
பிரியமும் விஷமும் கலந்த
இந்த தேநீரை
நான் அருந்திதான் ஆகவேண்டும்