Monday, October 31, 2011

*குட்டி தேவதைகள்

மருத்துவர் அழைப்புக்காகக் காத்திருக்கிறேன்

என் எண் வரவில்லை
அதனால் இன்னும் கூப்பிடவில்லை

வலியை ஆறுதல்படுத்தியபடி
நினைவால் தடவிக்கொடுத்தபடி
அமர்ந்திருக்கிறேன்

மருந்து நெடி கூடிய அந்த ஹாலில்
ஆடி ஓடிக் கொண்டிருக்கிறாள் ஒரு சிறுமி

அம்மாவிடம் ஓடுவதும்
அவள் கையிலிருக்கும் குழந்தையை
முத்தமிடுவதுமாய்

அந்த பட்டாம் பூச்சியின் அசைவுகள்
வலியை மறக்கச் செய்கின்றன

பரவும் மணம் போல
அவள் வாசனையை
எல்லாக் கண்களும் முகர்கின்றன

அவள் பெயர் கேட்கத் தோன்றுகிறது

குட்டி தேவதைகளுக்குப் பெயர் எதற்கு
மனம் ஒரு பதிலையும் தருகிறது

ஒருவர் அவளைப் பிடித்து பெயர் கேட்கிறார்

சம்பிரதாயக் கேள்விகளை நிராகரிப்பவள் போல
சொல்ல முடியாது எனச் சிரித்தபடியே ஓடுகிறாள்

அந்த சிரிப்பில் சிதறி விழுகின்றன
சில பெயர்களும் கொஞ்சம் இசையும்

என் கையிருக்கும் புத்தகத்தைப் பார்த்து ஓடி வருகிறாள்

இதில் பொம்மைகள் இல்லையே என்கிறாள்

உள்ளே பொம்மைக் கதைகள் இருக்கின்றன என்கிறேன்

ஒரு கதை சொல்லச் சொல்லிக் கேட்கிறாள்

என் பொய்கள் ஏதோ ஒரு கதையை
அழைத்து வரத் தொடங்கினேன்

ஒரு தேசத்துல ஒரு குட்டி இளவரசி இருந்தா
அவ பேரு…பேரு…ம்….சின்ட்ரலா…

அம்மா இந்த மாமா என் பேரச் சொல்றாரு
எனச் சொல்லியபடியே ஓடினாள்

உண்மையான என் பொய்க்கு
நன்றி சொல்லியபடியே
கண் துளியைத் துடைக்க
என் எண்ணை சொல்லிக் கூப்பிட்டார்கள்

முழுதுமாய் நீங்கிய வலியுடன்
நுழைந்தேன் மருத்துவர் அறைக்குள்

*தினகரன் தீபாவளி(2011)மலரில் வெளியானது

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஆகா அருமையாக இருக்கிறது! தினகரனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete