Friday, October 15, 2010

வார்த்தைகளும் மீன்குஞ்சுகளும்

ஆழ்ந்த தியானத்தில்
காற்றை உள்ளிழுத்தபோது
கூடவே போய்விட்டன
சில வார்த்தைகளும்

மீன்குஞ்சுகளைப் போல
சுற்றின வார்த்தைகள்

ஒரு மீன்குஞ்சு
மெல்ல நகர்ந்து
ரத்தத்தில் ஓடிய
கெட்ட கனவுகளை
உட்கொண்டது

ஒரு மீன்குஞ்சு
இதயத்தில் தங்கிக்கிடந்த
வன்மத்தை
எடுத்துக்கொண்டது

தலைக்கு வந்த ஒன்று
அங்கு படிந்து போயிருந்த
புராதன கோபங்களைத் தின்றது

தியானத்தின் மூச்சு நீள
உள் சென்ற வார்த்தைகள்
வெளி வந்து விழுந்தன
இறந்த மீன்குஞ்சுகளாய்

ஒன்று மட்டும்
காப்பாற்றச் சொல்லி
போராடியது

இறுதியில்
என் மீது ஒட்டியிருந்தது
அது வீசிச் சென்ற
மரணத்தின் எச்சில்

1 comment:

  1. புராதன கோபம் - புதுசா இருக்கே. இறுதி வரிகள் மிக அருமை ராஜா சார்.

    ReplyDelete