Tuesday, September 17, 2024

தெரியுமா உங்களுக்கு

நீங்கள் ஓட நினைத்த தூரத்தை

அவர்கள் ஓடி முடித்துவிட்டார்கள்

தெரியுமா உங்களுக்கு


நீங்கள் வரைய நினைத்த ஓவியத்தை

அவர்கள் வரைந்து பார்த்துவிட்டார்கள்

தெரியுமா உங்களுக்கு


நீங்கள் எழுத நினைத்த கதையை

அவர்கள் எழுதிப் பிரசுரித்துவிட்டார்கள்

தெரியுமா உங்களுக்கு

 

நீங்கள் களைப்பில்

இளைப்பாறிய நேரத்தில்

அவர்கள் முனைப்பில்

வென்றுவிட்டார்கள்

தெரியுமா உங்களுக்கு

 

நீங்கள் உறக்கத்தில்

இழந்த வாய்ப்புகளை

அவர்கள் விழிப்பில் வென்றுவிட்டார்கள்

தெரியுமா உங்களுக்கு

 

நீங்கள் காலம் கைகொடுக்கும் என்று

காத்திருந்த நேரத்தில்

அவர்கள் காலத்தோடு கைகோர்த்து

விரைந்துவிட்டார்கள்

தெரியுமா உங்களுக்கு

Thursday, September 12, 2024

இருள் பேசுகிறேன்

இருளிலிருந்து
இருள்
பேசுகிறேன்
உங்களை என்னால்
பார்க்கமுடிகிறது
உங்கள் கண்ணீரில் வழியும்
சொற்கள் என் காதுகளை
வந்தடைகின்றன
அது துயரம் தருகிறது
இது வடிவதற்குள்
வேறுவிதமாக மாறிவிடுகிறீர்கள்
இருளில்
நீங்கள் செய்யும்
அனுமதிக்க முடியாத
விஷயங்களும்
மன்னிக்கமுடியாத
குற்றங்களும்
நிறைய
வெளியே
வெள்ளை மனதுக்காரராகக்
உங்களைக் காட்டிக்கொள்வது
குரூரமான நாடகக் காட்சிகளைப்போல்
இருக்கின்றன
இப்படி ஊமை இருள் நான்
உணர்வது எவ்வளவோ
ஒரு நாள்
ஒரு நண்பர்
ஒரு கோரிக்கை வைத்தார்
அது முடியாது என்றேன்
இது உங்களுக்கும்
தெரிய வேண்டும
இருளே
நீ என் மன இருளோடு
பேசவேண்டும்
என்பதுதான் அது
புன்னகையுடன்
நிராகரித்துவிட்டேன்
கூடுதல் கோபத்தோடு
என்னை மிதித்துப்
போனார்
பிடித்த சிகிரெட்டைக்
கீழே போட்டு
நசுக்கினார்
பூட்ஸ் கால்களால்
மிதித்து சத்தம்
எழுப்பியபடி கடந்தார்
இது
இருளின் வலி அல்ல
உண்மையின் வலி
தீராத வலி
வேறென்ன சொல்ல
உங்களுக்கு
ஒரே ஒரு கோரிக்கை
மன இருளிலிருந்து
வெளியே வரப்பாருங்கள்
அதை
உண்மையாக
அடையப் பாருங்கள்
உங்கள் கண்களில்
மன இருள் இல்லாத
வெளிச்சத்தை
நான் பார்க்கும்போது
நிகழலாம்
நம் உரையாடல்
See insights and ads
Like
Comment
Send
Share

Monday, August 26, 2024

காலம் மிதக்கிறது

 தேதி கிழித்ததுபோல்

நாள் போய்விட்டது

தேங்கிய நினைவுகளில்

காலம் மிதக்கிறது


உணவே

 உணவே

அருகில் வராதே

பசியோடு

உரையாட வேண்டும்


அமைதி

 அமைதியாக

மனம் அலைபாய்வதைப்

பார்த்துக்கொண்டிருந்தேன்

அலைபாய்ந்தபடியே மனம்

மேலும் அமைதியாக

என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது


Friday, March 22, 2024

உணர்வின் தருணம்

 வண்ணக் கொப்பரையில்

தூரிகை விழுந்து

தற்கொலை

செய்துகொள்வதுபோல்

கனவு வந்தபோது

அவன் அலறி துடித்து

எழுந்தான்

அந்த உணர்வின்

தருணம்தான்

அவனை

ஓவியனாக்கியது

Monday, March 18, 2024

பறவையின் பாடல்

பறவைபோன தடத்தில்

மிதந்துகொண்டிருந்தன வார்த்தைகள்

 

எதுவும் பிரிந்துபோகாமல்

காற்று மெல்ல ஊதி ஒன்றாக்கி

என்னிடம்

கொண்டுவந்து சேர்த்தது

 

கவனித்து வரிசையாக்கி

இசைலயத்தோடு எழுதினேன்

 

பிறகு பாடியபோது

அதே பறவை

ஒரு கிளை மீதமர்ந்து

கேட்டுக்கொண்டிருந்தது


Wednesday, February 14, 2024

விடுதலை

 சிறைகளை

மாற்றிக்கொண்டே

இருக்கிறீர்கள்

விடுதலை எனச் சொல்கிறீர்கள்

 

எங்கேயோ...எதையோ...

 

சுவரில் சாய்ந்து

எங்கேயோ பார்த்து

எதையோ முணுமுணுக்கிறாய்

நான் அதற்குச் சொற்களை யோசிக்கிறேன்

நீ கேட்டு முணுமுணுப்பில் பொறுத்திப் பாடுகிறாய்

உயிர் பெறுகிறது பாடல்

வியப்பு மேலிடக் கேட்கிறேன்

இந்தப் பாடல் எங்கிருந்து வந்தது

உன் முணுமுணுப்பிலிருந்தா

இல்லை எனத் தலையாட்டுகிறாய்

என் சொற்களிலிருந்தா

மறுபடியும் மறுக்கிறாய்

பிறகு எங்கிருந்து வந்தது

கண்களைத் துடைத்துக்கொண்டு

சொல்கிறாய்

துயரத்திலிருந்து


 

Wednesday, January 17, 2024

உங்களை எப்போது விடுதலை செய்யப்போகிறீர்கள்

உங்களை எப்போது

விடுதலை செய்யப்போகிறீர்கள்

நினைவுகளில் அடைபட்டிருக்கிறீர்கள்

கனவுகளில் சிறைபட்டிருக்கிறீர்கள்

கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டிருக்கிறீர்கள்

எதிர்பார்ப்புகளில் அகப்பட்டிருக்கிறீர்கள்

தேவைகளில் திணிக்கப்பட்டிருக்கிறீர்கள்

ஆசைகளில் அடைக்கப்பட்டிருக்கிறீர்கள்

சொல்லிக்கொண்டே வந்தவர்

சொல்லிக்கொண்டே போனார்

அவர் சொல்லியது

கேட்டுக்கொண்டே இருந்தது

உங்களை எப்போது

விடுதலை செய்யப்போகிறீர்கள்


Tuesday, January 16, 2024

கதையும் குழந்தையும்

 கடவுளின் தோள்மேல்

அமர்ந்திருக்கிறேன்

எனச்சொன்னது

மலைமேல்

அமர்ந்திருந்த குழந்தை

எப்போது

கீழே வருவாய்

குரல் எதிரொலிக்கக் கேட்டேன்

கடவுள் எனக்குக்

கதைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்

கேட்டு முடித்தவுடன்

வருவேன் என்றது

வந்தபின்

அந்த கதையை எனக்குச் சொல்வாயா

ஆர்வம் கூட கேட்டேன்

கடவுள் எனக்குச் சொன்னக்

கதையைச் சொல்ல மாட்டேன்

நான் மலைக்குச் சொன்னக்

கதையைச் சொல்கிறேன் என்றது

   

 

Tuesday, January 02, 2024

இருள்

1
அழகான இருள்
அழகை
மாற்றிக்கொண்டே இருக்கிறது
2
பாலத்தின் அடியில்
நதிபோல்
ஓடும் இருளில்
நீந்திக் கரையேறலாம்
வா
3
பாய்போல்
சுருட்டிய இருளை
கனவில்
விரித்து வைத்தேன்
நட்சத்திரங்கள் வந்தால்
உரையாடலாம்
4
இருளை வரைந்து
உள்போய் வந்த
குழந்தை சொன்னது
கருப்பு ஆகாயத்தில்
மிதந்து வந்தேன்
5
சத்தம் போட்டு
இருளை எழுப்பிவிட்டேன்
அமைதியாக என்னை
உறங்கச் சொன்னது
6
இருள் என்னைத்
திருத்தும்போதெல்லாம்
வெளிச்சம்
விலகி நின்று
கவனிக்கிறது
7
இமை மூடி
கேட்கிறேன்
இருளின் பாடலை
8
தனிமைப் பசி
கனிந்த இருள்
தியானச் சுவை