Sunday, August 12, 2012

பிறந்த தேதி


கை நீட்டினாள் தேவதை
சிரித்தபடி

அவள் தாயிடம் கேட்டேன்
இவ பிறந்த தேதி
உனக்குத் தெரியுமா

அட போங்கைய்யா
என் பிறந்த நாளே
எனக்குத் தெரியாது

அவ அப்பன் யாருன்னும்
தெரியாது

இவளே நானே
தனியா பெத்தெடுத்தப்ப
மழை பெஞ்சுது
அது தெரியும்
என் வலிக்கு ஒத்தடமா
தூறிக்கிட்டிருந்தது

சிக்னல் விழ
என் வாகனத்தைத்
தாண்டிக்கொண்டு போய்
இடம் தேடி நிறுத்தி
திரும்பி வந்து பார்க்க
அவர்களைக் காணவில்லை

மழை தொடங்கி இருந்த்து

அப்போது அது
என் மேல் விழும்
அமிலமாகப் பட்டது

1 comment:

  1. நல்லதொரு சிந்தனை வரிகள்...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

    ReplyDelete