Monday, October 31, 2011

*அதனதன் இடத்தில்

கோயிலுக்கு வந்த எல்லோரும்
பிரார்த்தனை செய்து கொண்டார்கள்

பிரசாதம்
பகிர்ந்து கொண்ட நேரத்தில்
மகளிடம் தந்தைக் கேட்டார்

நீ என்ன
பிரார்த்தனை செய்து கொண்டாய்

அதிக மார்க் எடுக்க வேண்டும் என்றா

டாக்டர் ஆக வேண்டும் என்றா

வெளிநாடு போக வேண்டும் என்றா

எல்லாவற்றிற்கும்
இல்லை என்று தலையாட்டிவிட்டு
பிறகு சொன்னாள்

இந்த கோயில் யானையை
உடனே கொண்டுபோய்
காட்டில் விட்டுவிட வேண்டும் என்று
வேண்டிக் கொண்டதாக

மனிதர்கள் அதை செய்ய மாட்டார்கள்
கடவுளையும் செய்ய விட மாட்டார்கள்

சிரித்தபடி சொன்னாள்
சோகம் இழையோட

அசை போட்ட எல்லோரும்
அவளைப் பார்க்க
அவள் தூரத்திலிருந்த
யானையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்

அது தும்பிக்கை நீட்டி
அவளை அழைப்பது போலிருந்தது

வா இருவரும்
காட்டுக்கு ஓடி விடலாம் என
கூப்பிடுவது போலவும் இருந்தது

*ஆனந்த விகடன் தீபாவளி மலரில்(2011)வெளியானது

1 comment: