Sunday, June 12, 2011

விடைபெறும்போது

விடைபெறும்போது
ஒரு சின்ன புன்னகையை
விட்டுச் செல்லுங்கள்

கை குலுக்குங்கள்

தங்கிப்போன தருணங்களைப்
பகிர்ந்துகொள்ளுங்கள்

விடைபெறும்போது
பால்கனிச் செடி பிடித்திருக்கிறது
என்று சொல்லுங்கள்

குழந்தையின் கிறுக்கல்களை
ஓவியமாகக் கண்டெடுங்கள்

குறைவான சர்க்கரை இருந்தும்
காப்பி குறித்த சுவையை
சுவையாக சொல்லுங்கள்

விடைபெறும்போது

பிறந்த நாளை குறிப்பிட்டு
என் வாழ்த்துக்கள் வரும் என்று
உற்சாகப்படுத்துங்கள்

டீவியின் மேலிருக்கும்
பொம்மையை ரசியுங்கள்

அதன் கண்கள் வழியே
உங்களைப் பாருங்கள்

முதியவர்கள் இருப்பார்கள் எனில்
அவர்கள் வயதுக்குள்
போய் வாருங்கள்

விடைபெறும்போது
நாய்க்குட்டியைத்
தடவிக்கொடுக்க
மறக்காதீர்கள்

அது குரைக்குமெனில்
வீட்டின் பாதுகாப்பு கவசம்
எனப் பாராட்டுங்கள்

நகை இல்லாத
கழுத்தைப் பார்த்து
துயரப்படுவதை தவிருங்கள்

மீன் தொட்டி மீன்களிடம்
கடல் விசாரித்ததாய் சொல்லுங்கள்

வாங்கிச் செல்லும் பொருளில்
உங்கள் பிரியத்தை
குறித்துவையுங்கள்

விடை பெறும்போது
தூசி படிந்த கணங்களை
அசைபோடுங்கள்

ஒன்றிரண்டு சுவாராஸ்யவங்களை
பொதுவான அலைவரிசையில்
பேசுங்கள்

முக்கியமாக
விடைபெறும்போது
நீங்கள் முழுதாய்
விடைபெற்றுவிடாமல்
நினைவுகளின் நீட்சியாய்
லயமாய்
அங்கு சுற்றிவரும்படி
இருக்கப் பாருங்கள்

(19.06.2011,கல்கி இதழில் வெளியானது)

2 comments:

  1. ஒருவர் வீட்டுக்கு விருந்தாளியாய் சென்று திரும்பும்போது மீண்டும் மீண்டும் அந்த விருந்தாளி வர மாட்டார்களா என்று ஏங்க வைக்கிறது உங்கள் கவிதை.

    ReplyDelete