Sunday, May 01, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

460-

தன் தலையில்
ரத்தம் சூடி இருக்கும்
முள்ளுக்குத் தெரியாது
துடித்து அடங்கிய வலி

461-

துரோகங்களை
நீங்கள் மறந்துவிடலாம்
துரோகங்கள்
ஒருபோதும் உங்களை
மறப்பதில்லை

462-

நாகரீகம் கருதி
அழவில்லை
ஆனாலும் ஒரு துளி
கசியாமலில்லை

463-

பிரார்தனைகளை
மறந்துவிட்டேன்
இறைவன் ஞாபகத்தில்
வைத்திருப்பார் என்பதால்

464-

குவளை நீரை
குடித்தன பறவைகள்
தீர்ந்தது என் தாகம்

465-

என்னைத்
தின்னக் கேட்கிறது
வன்மம்
வன்மத்தை
தின்கிறேன்
நான்

466-

வாக்கியங்களின்
வார்த்தைகளுக்கிடையில்
பார்வைகள்
புத்தகம் முழுதும்
கண்கள்

1 comment: