Monday, December 28, 2009

சிறுமி

பிறந்த நாளுக்கு
சாக்லெட் வாங்கும் சிறுமி
கடைக்காரருக்கு
முதல் சாக்லெட்டை
கொடுத்துவிட்டு ஓடுகிறாள்

வலி

கவனமாக
நடந்து செல்லுங்கள்
நீங்கள் நசுக்கிப்போட்ட
பனித்துளிகளில்
கசிகிறது வலி

ஒத்திகை

ஒத்திகை செய்து வந்தோம்
என்ன பேசலாம் என்று
உதிர்ந்து கிடக்கும் வார்த்தைகள்
நம்மைப் பார்த்து சிரிக்கின்றன

நட்பானது

நனைவதைத் தவிர
வழியில்லை
நட்பானது மழை

Saturday, December 26, 2009

அனுபவ சித்தனின் குறிப்புகள்

28

நீ கூவி
விற்றப் பொய்கள்
வேறொரு
சந்தையில்
விற்றுக் கொண்டிருந்தன
நீ படுத்தடங்கப்போகும்
சவப்பெட்டியை

29

ஏற்கவா
தவிர்க்கவா
துள்ளிக் குதிக்கிறது
கேள்வித்தவளை
ஒன்றிலிருந்து
இன்னொன்றிற்கு

30

நண்பனின்
இறுதிச் சடங்கு
பார்த்து விட்டு
திரும்பினேன்
என் மரணத்தை

31

ஒரே புன்னகைதான்
பூச்செண்டும்
தரும்
போர்வாளாகவும்
மாறும்

Friday, December 25, 2009

விளிம்பில்

பிரபஞ்சத்தின் விளிம்பில்
தொங்கும்
ஒரு சொல்
அசைந்து அசைந்து
எழுப்பும்
அதிர்வில்
கொட்டுகின்றன
சொற்கள்

படிகள்

நீரில்
படிகள் வரைந்து
இறங்கிக் கொண்டிருக்கிறது
மீன்

ஏறிக்கொண்டிருக்கிறேன்
நான்

முன் பின்

நீங்கள்
கைதுடைக்கப்
போகும்முன்
அந்தக் காகிதத்தில்
இருக்கும் கவிதையைப்
படித்து விடுங்கள்

இல்லையெனில்
கையில்
ஒட்டி இருக்கும்
ஒன்றிரண்டு
வார்த்தைகளை
கழுவி விடுங்கள்

அறிவிப்பு

உங்கள் பெயர்
அறிவிக்கப்பட்ட போது
மேடைக்கு வந்து
ஏன் பரிசை
வாங்கவில்லை

உங்கள் குரல்
கேட்காத தொலைவில்
இருந்தேன்
ஒரு கூழாங்கல்லின்
தலையை வருடியபடி

சாயல்

எல்லோர் சாயலும்
என் கவிதையில்
தென்படுவதாகச் சொன்னார்கள்

தேடிக்கொண்டிருக்கிறேன்
எங்கேயாவது
நான் தென்படுகிறேனா என்று

விருந்தினர்

திட்டப்போகும்
அம்மாவை சமாளிக்க
பல பதில்களை
யோசித்து
பலமான ஒன்றைத்
தேர்ந்தெடுத்து
வீட்டிற்குள்
அடியெடுத்து
வைக்கிறாள் சிறுமி

இப்படி
நெனைஞ்சி வந்து
நிக்கிறியே
பதறுகிறாள் அம்மா

அது இல்லம்மா
மழைய விருந்தினரா
கூப்பிட்டுக்கிட்டு
வந்திருக்கேன்
சொல்கிறாள் மகள்

மகளின் பதிலில்
பரவசமாகித்
திட்டுவதை
மறக்கிறாள் அம்மா

Friday, December 18, 2009

அனுபவ சித்தனின் குறிப்புகள்

27

வாழும் போதே
பழகு
வாழும் போதே
மரணத்தை அள்ளித்
தின்னப் பழகு

உயிரின் பாடல்

அவன்
பியானோவின்
மேலேறி
நின்று
அதைச்
செய்தான்

அவன் உடல்
இசை வாகனத்தில்
விழுந்தபோது
அதிரத் தொடங்கியது
உயிரின் பாடல்

நிறமற்ற நான்

நான் வரைந்த
குருட்டுப்பெண்
வண்ணங்களின்
கண்களால்
பார்க்கிறாள்
நிறமற்ற என்னை

தலையாட்டுதல்

வாடாமல் ஒரு காடு

தலைப்பைக் கேட்டுத்
தலையாட்டின பூக்கள்

Tuesday, December 15, 2009

காற்றாடியும் குழந்தையும்

கடற்கரையிலிருந்து
திரும்பிய போது
குழந்தைக் கேட்டாள்

அப்பா நான் தொலைச்ச
காத்தாடி என்னாவும்

வானத்தில
ஒரு அம்மா இருக்கா
அவ பத்திரமா
இது மாதிரி தொலைஞ்ச
காத்தாடிகளப் பாத்துக்குவா

அப்பாவின் பதிலில்
தூங்கத் தொடங்கினாள்
குழந்தை

புன்னகைத்தாள் அம்மா

தன் குழந்தையை
நினைத்தபடி
ஓட்டினார் ஆட்டோக்காரர்

வரும்

வரும்
இன்றிரவை
பெருமைப்படுத்த
ஒரு பெருங்கனவு
வரும்

பயம்

சத்தம் போட்டு
மகனைக் கண்டிக்கும் அப்பா

அடித்து விடுவாரோ என்று
அம்மா பயப்படுகிறாள்

அடித்து விடுவோமே என்று
தந்தையும் பயப்படுகிறார்

Sunday, December 13, 2009

அனுபவ சித்தனின் குறிப்புகள்

25

ஆடுகிறது
தூக்குக் கயிறு
இறந்துகொண்டே வருகின்றன
நொடிகள்
முப்பத்தி ஏழாவது நொடியில்
நானும்

26

யார் தொலைத்த
கண்ணீரோ
என் கண்ணில் வந்து
தொலைக்கிறது

Saturday, December 12, 2009

குழந்தைகளின் பெயர்கள்

தன் பிறந்த
நாளுக்கு
எல்லோருக்கும்
சாக்லெட்
கொடுத்த கொண்டே
வந்த குழந்தை
என்னிடம் வந்தபோது
தீர்ந்து போயிருந்தது

ஏமாற்றத்துடன்
ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொண்டோம்

பரவாயில்லை
உன் பெயரைச் சொல்
போதும் என்றேன்

சொல்லிய
குழந்தையின் பெயரில்
இனிப்பு மழை

குழந்தையின் டப்பாவில்
நிரம்பி இருந்தது
சாக்லெட் எடுத்திருந்த
குழந்தைகளின் பெயர்கள்

Friday, December 11, 2009

கோடு

நீண்டு கொண்டிருந்த கோடு
நிற்கவில்லை
பேனாவின் மை
தீர்ந்த பின்னும்
கோட்டின் பயணத்தைத்
தொடந்தது
விரல்களின் ரத்தம்

Wednesday, December 09, 2009

இந்த வரிக்குப் பிறகு

என் குழந்தையின்
சிரிப்பைப் போல்
நுரைத்துப் பொங்குகிறது
மதுக்கோப்பை

இந்த வரிக்குப் பிறகு
என்னை அழைத்துப்போனது
ஒரு குழந்தை
ஒயின் ஷாப்பிலிருந்து

மரத்தின் கதை

சுவைத்த பழம்
சொல்லிக் கொண்டே வந்தது
தான் வளர்ந்த
மரத்தின் கதையை

அது இன்னும்
சுவைகூட்ட
தின்று முடித்தேன்
பழத்தையும்
மரத்தையும்

ஒரே ஒரு சொல்

ஒரு சொல்லை
ஒரே ஒரு
சொல்லை
பார்த்தேன்

மனதை
கிறங்கடிக்கும்
ராகத்தைப்
பாய்ச்சியது

கவிதையைப்
போர்த்திக் கொண்டு
ஆடவும்
தொடங்கியது

எப்போது

தன்னை முழுதுமாய்
கருணைக்கு அர்ப்பணம்
செய்யும்
ஒரே ஒரு கண்ணீர்துளி
உங்களிலிருந்து
எப்போது விழும்

காலடியில்

தன் காலடியில்
காற்றை
நட்டுச் செல்கிறது
குழந்தை
அதில் குலுங்கும் பூக்கள்
இறைவனின் சிரிப்புடன்

தீராத ஒளி

குழந்தையின் புன்னகையில்
ஏற்றப்படும் ஒற்றைத் திரி
தீராத ஒளியை வழங்குகிறது
உலகுக்கு

Sunday, December 06, 2009

அனுபவ சித்தனின் குறிப்புகள்

23

நீண்ட தூரம்
வந்துவிட்டீர்கள்
என்ன செய்யப் போகிறீர்கள்

வழி சொல்வதைக்
கேட்கப் போகிறேன்

24

பிற
பிறக்காதே

சேர்
சேராதே

போ
போகாதே

விழு
விழாதே

பார்
பார்க்காதே

அழு
அழாதே

ஓடு
ஓடாதே

துடி
துடிக்காதே

சாவு
சாவாதே

இரண்டும் நீ

இரண்டுமாய்
நீ நீ

வேறென்ன

சொல்

சரியாக சொல்
நீ நிலவைத்
தொட்டாயா

ஆமாம்
இன்னும் சரியாக
சொல்வதென்றால்
நிலவு
என்னைத் தொட்டது

பிறகு

ஈக்களைப் போல்
மொய்க்கும்
வார்த்தைகளிடமிருந்து
முதலில் என்னைக்
காப்பாற்ற வேண்டும்
பிறகு நான்
கவிதையைக்
காப்பாற்றிக் கொள்கிறேன்

Tuesday, December 01, 2009

சம்பவம்

திசைமாறிப்
போன எறும்பு
கவிதையின்
இருபத்தி ஏழாம் வார்த்தையை
தீண்டியபோது
அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த
கன்னி வெடி
வெடித்தது

சிதறின
மொத்தப் பக்கங்களும்

சம்பவத்திற்கு
யாரும் பொறுப்பேற்க வேண்டாம்
என்று எழுதப்பட்டிருந்த காகிதம்
தீக்கிறையாகி இருந்தது
பக்கத்தில் எறும்பும்

சகாவின்
இறந்த செய்திகேட்டு
வந்துகொண்டிருந்தன
மற்ற எறும்புகள்
அஞ்சலி செய்ய

(உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை)

பேச்சு

ஊருக்கு வந்த மகன்

இரவு தாண்டிப்
போகிறது பேச்சு

தான் தொலைந்த
நகரத்தைப் பற்றிச்
சொல்கிறான் மகன்

அவன் தொலைத்த
கிராமத்தைப் பற்றிச்
சொல்கிறாள் அம்மா

சுவையான ஒன்று

தேநீர் அருந்திய பெரியவர்
சுவையாக ஒன்றை
சொல்லிவிட்டுப் போனார்

முதுமைய நட்பாக்கிட்டா
வயசு எதிரியா தெரியாது

காலடியில் வானம்

உன் காலடி பூமியாக
நான் வரவா
வானம் கேட்பதைக்
கேட்காமல்
விளையாடும் குழந்தை

இருள் சதுரங்கள்

வந்துவிட்டது மின்சாரம்
இருளில்
எத்தனை சதுரங்கள்
வரைந்தேன் என்று
தெரியவில்லை