Sunday, August 19, 2007

இழந்த மரம்

அவசரமாய் காகிதம் கிழித்து
காது குடைந்தபடிப் பார்த்தேன்
நான் கிழித்திருந்தது
மகள் வரைந்த மரத்தை
என்னால் தன் மரம்
செத்துப்போனதாக
அழுது புரண்டாள்
நிறுத்த முடியவில்லை
கையிலிருந்த காகிதத்தில்
பிய்ந்துபோன கிளை
கிளையை விட்டு
வெளியேறிய பறவைகள்
அவளோடு சேர்ந்து
சண்டைக்கு வந்தன
கிளை விரிந்து காடானது
காட்டின் சத்தம்
காதை உடைத்தது
நேரமாயிற்று அடங்க
குழந்தையின் அழுகையும்
காட்டின் கோபமும்

2 comments:

  1. ஏங்க இப்படி பண்ணினீங்க? எப்படி அந்தக் காட்டைத் திருப்பி கொடுக்க போறீங்க?

    ReplyDelete