Saturday, August 04, 2007

தூறலைப்பிடிக்கும் சிறுமி

கை நீட்டி
தூறலைப் பிடித்துக்கொண்டிருந்த சிறுமி
கண்ணில் மின்னல் பொங்கச் சொன்னாள்
இந்தத் தூறலை வைத்து
மழையை வளர்க்கப்போகிறேன்
விரலிடுக்கில் துளிகள் நழுவ
முகம் சாய்த்துக்
கை குவித்தாள்
பள்ளி விட்டு வந்த
ஒரு நாளில்
சிறுமியிடம் கேட்டேன்
எந்த அளவிற்கு
மழை வளர்ந்திருக்கிறது என்று
தன் புத்தகப் பையில்
சில குட்டி மேகங்களைச் சேர்த்து
வைத்திருப்பதாகப் பூரித்தாள்
நனைய மழை வேண்டுமா
பார்த்தபடி கேட்டாள்
அப்போது எட்டிப்பார்த்த
வானவில் துண்டு சிரித்து
மறைந்து போனது

( செப்டம்பர் 2007 'புதிய பார்வை' இதழில் வெளியானது)

1 comment: