Saturday, July 21, 2007

உன்னைத் துப்பாக்கியால் விசாரிக்கப்போகிறேன்

உன்னைத் துப்பாக்கியால் விசாரிக்கப்போகிறேன்
என்றது குரல்
துப்பாக்கி பிடித்த கரம் தெரிந்தது
மங்கலான வெளிச்சத்தில் அசைந்தது
உயிர் மீது வைக்கப்பட்ட குறி என்பதால்
பயம் சகதியாகி உள்ளிறக்கியது
தொடங்கியது விசாரணை
உன்னை சுடுவதில் தவறில்லை
நீ நாட்களை சோம்பேறித்தனத்துடன் துவக்குகிறாய்
காலைச் சூரியனைப் பார்த்ததில்லை
சுயநலத்தின் வலை
உன் நகர்வுகளைப் பின்னுகிறது
துப்பாக்கியின் கோபம் கூடியது
நேற்று கூட
காசு கேட்ட ஒரு சிறுமியை
உற்றுப்பார்த்துப் போடும் போது
கையை அழுத்திப்பிடித்தாய்
பூவை
நிலவை
நாய்க்குட்டியை
நீ ரசித்ததில்லை
இன்னும் விசாரணையை
நீட்ட விரும்பவில்லை
தீர்ப்பைத் தரப்போகிறேன்
சொன்ன துப்பாக்கி வெடித்தது
அதிர்ச்சியில் உறைந்து எழுந்தேன்
வலி
ரத்தம்
மரணம்
எதுவுமில்லை
இரவைத் துளைத்திருந்தன
துப்பாக்கியின் தோட்டாக்கள்

2 comments:

  1. நன்றாக உள்ளது. தொடரவும்...

    விக்னேஷ்வரன்

    ReplyDelete
  2. சுய விசாரணை வரிகள் அருமை ராஜா.

    ReplyDelete